பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாகவே வலி ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர் .
ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாவது முதல்வர் என்ற பெருமையை பெற்றவர் பக்வந்த் மன். இவரின் தந்தை ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் . தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பல்வேறு கெட்டப் போட்டுக்கொண்டு பஞ்சாப் மற்றும் தேசிய அரசியலில் நடப்பு நிகழ்வுகளை காமெடியாக நடித்து வந்தவர் பக்வந்த் மன். அவரின் இந்த பணி மக்களிடையே அதிகம் ரசிக்க வைத்தது. இதனால் சிறந்த நகைச்சுவை கலைஞராக அந்த மாநிலம் முழுவதும் இவரின் புகழ் பரவியது .

நகைச்சுவை மூலம் அரசியல், சமூக கருத்துக்களை சொல்லி வருகிறேன் . ஆனால் சேற்றை சுத்தம் செய்ய சேற்றில் இறங்க வேண்டும். இதை உணர்ந்தே தீவிர அரசியலுக்கு வந்துள்ளேன் என்று சொல்லிவிட்டு திடிரென அரசியலில் என்ட்ரி கொடுத்தவர் பின்னர் முழு நேர அரசியல்வாதியாகவே மாறினார் .
கடந்த 2014ஆம் ஆண்டில் பஞ்சாபில் புதிய கட்சியாக கால் பதித்த ஆம் ஆத்மியில் இணைந்தவுடன் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது . மனவலிமையுடன் சொந்த தொகுதியில் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அகாலி தளத்தின் தலைவரான சுதேவ் சிங்சாவை, மோடியின் அலைக்கு மத்தியிலும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார் .
கடந்த 2019 இல் நடந்த தேர்தலில் மீண்டும் வென்று மக்களவை உறுப்பினராக தேர்வானார். 2017 தேர்தலுக்குப் பின்னர் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.