அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாளை தொடங்குகிறது. கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 150 நாட்கள் பாதயாத்திரையாக செல்கிறார் .
இந்நிலையில் இன்று இரவு 8:15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் அவருக்கு விமான நிலையத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பு அளிக்க உள்ளார் . ராகுல் காந்தியுடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பாகல் மற்றும் மூத்த தலைவர்களும் வருகை தர உள்ளனர் .
இதையடுத்து நாளை காலை சென்னையிலிருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ பெரும்புத்தூரில் உள்ள பாரத ரத்னா ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு ராகுல் காந்தி சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் .

இதைத்தொடர்ந்து நினைவிடத்தில் மரக்கன்று நடுதல், ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன் உயர்த்தியாக்கம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்தல் , ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நினைவிட நுழைவாயில் அருகில் காங்கிரஸ் கட்சி கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.
ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு அவரது நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் கட்டி முடிக்கப்பட்டது. இந்நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் வந்தபோதிலும் ராகுல் காந்தி வந்ததில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ராகுலும் பிரியங்காவும் அஞ்சலி செலுத்த வந்தனர். காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது பிரியங்கா துக்கம் தாளாமல் தந்தையை நினைத்து தரையில் அமர்ந்து கதறி அழுதுவிட்டார். இதனால் நினைவிடத்திற்குள் செல்லாமலே அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தற்போது ராகுல் காந்தி முதல் முறையாக ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு வருகிறார்.