இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே முழு காரணம் என , அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இருப்பினும் அங்கு பிரச்சனைகளும், நெருக்கடிகளும் இன்று வரை குறைந்தபாடில்லை. மக்கள் போராட்டமும் முடிவுக்கு வரவில்லை. அதிபர் மாளிகைக்குள் போராட்டகாரக்ள் நுழைந்ததால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.

இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வேறு வழியில்லாமல் குடும்பத்தினருடன் மாலத்தீவுகளுக்கு தப்பியோடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். பின்னர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முறையாக, நடாளுமன்றத்தில் ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இன்று நடைபெற்றது. இதற்கு முன்வரை, பிரதமரை மக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த பின், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுத்து வந்தனர்.

இந்த புதிய அதிபருக்கான தேர்தலில், ரணில் விக்ரமசிங்கே, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி குழுவின் முக்கிய தலைவரான டல்லாஸ் அழகப்பெரும மற்றும் இடதுசாரி கட்சியான, ஜனதா விமுக்தி பெரமுன கட்சியை சேர்ந்த அனுரா குமார திசநாயகே, ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலின் முடிவுகள் சற்று முன் வெளியாகிய நிலையில், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 223 உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்திருந்த நிலையில், 134 வாக்குகள் பெற்று இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார்.
டல்லாஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுரகுமார திசாநாயகே 3 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர். இலங்கையின் புதிய அதிபரகாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கேவிற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.