ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைவர் அறைக்கு எதிரே அமைந்திருக்கும் ஆய்வகத்தில் நான்கு வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பின் அச்சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை அவரது பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக அச்சிறுமி மனம் உடைந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். இதை கவனித்த பெற்றோர் மகளிடம் விசாரணை நடத்திய போது உண்மை தெரிய வந்தது. சிறுமி தனது தாயிடம் நடந்ததை சொல்லி இருக்கிறார். மறுநாள் பள்ளிக்கு மகளை அழைத்துச் சென்று யார் அந்த குற்றத்தை செய்தது என்று கேட்ட போது அந்த சிறுமி தன்னை பலாத்காரம் செய்தவரை காட்டி இருக்கிறார்.

இதை அடுத்து பெற்றோர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். பள்ளி முதல்வரின் கார் டிரைவர் தான் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். போலீசார் அந்த கார் டிரைவரை கைது செய்த போது, பெற்றோர் அவரை அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட ரஜினி குமார் பள்ளியில் ஆய்வகங்களை பராமரித்தல், ஊழியர்களுக்கான வேலை செய்தல் என்று உதவியாளராக இருந்து வந்திருக்கிறார். ரஜினி குமார் மீது ஐபிசி பிரிவு மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர் போலீசார். மற்றும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.