இது தொடர்பாக, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தை மேற்கொள்ளுதலுக்கான முகவர் வங்கியாக நிர்ணயித்ததற்கான ஒப்பந்தத்தை மும்பையில் ரிசர்வ் வங்கியுடன் செய்துகொண்டது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கி. தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையில் திறம்பட செயல்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது. இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி “பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, தொலை நோக்குத் திட்டமாக நாடெங்கிலும் மீண்டும் விரிவாக்க நடவடிக்கைகளிலும் அதற்கான திட்டங்களிலும், சேவைகளிலும் புதிய பரிமாணங்களை அடைந்து வருகிறது. ஏஜென்சி பேங்க் என்பது பொதுவாக ஒரு நிறுவனம் சார்பாக அந்த நிறுவனங்களின் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை கையாள்வது ஆகும். தற்போது, ரிசர்வ் வங்கியின் சார்பில் பொதுதுறை வங்கிகள் மட்டும் அன்றி தனியார் வங்கிகளும் மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த வங்கி நடவடிக்கைகளை கையாள்வதற்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டு வந்தது. அந்த அங்கீகாரம் பெற்றுள்ள வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கான ஏஜென்சி பேங்க் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு பல்வேறு வணிக விரிவாக்க நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய நிதிதுறை பரிந்துரைக்கும் எந்த துறை சார்ந்த வங்கி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியும். உதாரணமாக, அரசு துறை சார்பாக ரெவன்யூ வசூல் செய்யும் மற்றும் பேமெண்ட் செய்யும் வசதிகள், மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதிய கணக்குகள் முதலியனவற்றை மேற்கொள்ளும். மேலும், அரசு திட்டங்களுக்கான கணக்குகள், மாநில அரசுகள் நிர்வகிக்கும் திட்டங்களுக்கான கணக்குகள் எல்லாவற்றையும் மேற்கொள்ளலாம்.
அனைத்து நடவடிக்கைகளும் ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மற்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஜிஏ) அலுவலக பரிந்துரையின் படி வரைமுறைகளோடு செயல்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கியின் ஆண்டு தணிக்கை மற்றும் மத்திய அரசு துறைகளின் தணிக்கைக்கு உட்பட்டது.
அரசு சார்ந்த வணிக நடவடிக்கைகளின் மூலம் வங்கியின் வளர்ச்சி கூடுவதோடு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மத்திய அரசின் முக்கிய குறிக்கோள் டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்திற்கு முழு பங்களிப்பை அளிக்க முடியும் என்றார்.