தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகள் ஏற்கனவே நிறைந்து காணப்படுவதால் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயரம் 21 அடியும், நீர்வரத்து 642 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2850 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை எட்டிய நிலையில் நீர்வரத்தும் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் கூடுதலாக திறப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் மட்டும் நேற்று ஒரு நாளில் 64 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.