நேற்று நடந்த வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சபிர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹதி ஹசன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 26 பந்தகளை எதிர்கொண்ட மெஹதி ஹசன் 38 ரன்கள் விளாசினார், இதில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷகிபுல் ஹசன் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
இதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வங்கதேச அணி திணற மொஸாடெக் அதிரடியாக ஆடி வங்கதேச அணியை சரிவிலிருந்து மீட்டார். இறுதியாக வங்கதேச அணி 183 ரன்களை எடுத்தது. இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணியில் நிசாங்கா , குசேல் மெண்டிஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. நிசாங்கா 16 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய குசேல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
அசலங்கா 1 ரன்னில் ஆட்டமிழக்க, குனதிலகா 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 2 ரன்களில் வெளியேற, இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. இருப்பினும் கேப்டன் ஷனாகா தனது வழக்கமான அதிரடியை காட்டியதால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் ஷனாகாவும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு 7 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், வங்கதேச அணி வீரர்கள் 2 நோ பாலை வீசினர்.
இதனை பயன்படுத்தி கொண்ட இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.இந்நிலையில் வங்கதேச அணி தோல்வியை சந்தித்ததை இந்திய அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால் வங்கதேச வீரர்கள் சிலர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்திய அணி தோற்றால் அவர்களுக்கு எப்போதும் தனி குஷிதான். எனவே தான் அவர்களின் தோல்வியை தற்போது இந்திய ரசிகர்கள் மீம் போட்டு ஷேர் செய்து வருகின்றனர்.