தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டும் வரும் மருத்துவ கல்லூரியில் சமீபத்தில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பதிவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் அவர் கூறிருப்பதாவது :
கல்வி நிறுவனங்களால் ராக்கிங் குறித்து கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மீது திருப்தி இல்லை எனில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் நேரடியாக புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீதும் உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை ராகிங் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் :
*கல்லூரிகளில் ராக்கிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதை மீறி நடத்தப்படும் ராகிங்கை தடுக்க கல்லூரியிலேயே மாவட்ட ராக்கிங் எதிர்ப்புக் குழுக்களும் செயல்படுத்தப்பட வேண்டும்.
*புகார்கள் வரும் பட்சத்தில் காவல்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து சமாதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
*விழிப்புணர்வு கூட்டங்களில் காவல் நிலையங்கள் மற்றும் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டியது அவசியம்.
*அறிவிப்புப் பலகைகளில் தொலைபேசி/மொபைல்/ வாட்ஸ் ஆப் எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
*கல்வி வளாகத்தின் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
*பெறப்பட்ட புகார்களை முன்னுரிமை அடிப்படையில் விசாரித்து தீர்க்க வேண்டும்.
*பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சட்டக் கருத்துக்கள் பெறுவதில் தாமதம் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.