மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
வெளியானது முதல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் ரூ.230 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆயுத பூஜை விடுமுறை வருவதால், இந்த வாரமும் இப்படத்திற்கு மவுசு குறையாமல் ஹவுஸ்புல் ஆகி வருகிறது.
பெரும்பாலான இடங்களில் ஒரு வாரத்திற்கு இப்படம் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.இந்நிலையில் பொன்னியின் செல்வன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால் வருகிற அக்டோபர் 7ந் தேதி ரிலீசாக இருந்த காஃபி வித் காதல் திரைப்படம் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆதிக்கம் செலுத்தி வருவதன் காரணமாகவும், தியேட்டர்கள் பற்றாக்குறை காரணமாகவும் காஃபி வித் காதல் படத்தை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம்.