பாலா இயக்கத்தில் சூர்யா புதிதாக நடித்து வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், திடீரென சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோய்விட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில், “வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.
ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.
எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்..” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து @Suriya_offl அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். 🙏🏼 #Vanangaan pic.twitter.com/8jgJJtXyWI
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) December 4, 2022
‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பதிலளித்துள்ள சூர்யாவின் 2டி நிறுவனம், “பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யா அவர்களும் #2DEntertainment நிறுவனமும் #வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்.” என தெரிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் கடும் அப்செட் ஆகியுள்ளனர்.