சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார் சூர்யகுமார் யாதவ். கடந்த ஒரு வருடத்திற்க்கு மேலாக தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் வரும் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து இந்தியா ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. அதில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 94 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. சூர்யகுமார் யாதவின் அதிரடியால் அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணி 98 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமாரின் இந்த அதிரடி ஆட்டத்தை அடுத்து பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது இன்னிங்ஸ் குறித்து பேசுகையில், “ எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்யக் கூறினாலும் அதற்கு தகுந்தவாறு என்னை மாற்றிக்கொள்வேன். பயிற்சியாளர், கேப்டனிடம் என்னை எந்த பேட்டிங் வரிசையிலும் அனுப்புங்கள், ஆனால் விளையாடவிடுங்கள் என்று மட்டும் கூறியுள்ளேன் என்றார் சூரியகுமார் யாதவ்