நடிகர் சிம்பு மாநாடு என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
இதில் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர் இப்படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என் மகன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் பார்த்தேன்.
அதில் சிம்புவின் உழைப்பை பற்றி அவர் பேசியிருந்தார். அது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இப்படத்தில் ஒரு 20 வயது இளைஞனாக சிம்பு நடிப்பாரா என்ற சந்தேகம் அவருக்கு முதலில் இருந்தது. ஆனால் இயக்குனர் கௌதம் மேனன் சிம்பு நடித்தால் சரியாக இருக்கும் என்று கூறினார்.
எனவே இதற்காக சிம்பு தன் உடலை வருத்தி எடையை குறைத்து இக்கதாபாத்திரத்திற்காக போட்டோஷூட் எடுத்து அப்புகைப்படத்தை ஜெயமோகனிடம் காண்பித்தார். அதை பார்த்த ஜெயமோகன் சிம்பு 18 வயது தக்க இளைஞனாக மாறிவிட்டார் என கூறி பாராட்டினார்.
ஜெயமோகன் போன்ற ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் சிம்புவை பாராட்டியதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. இவ்வாறு டி.ராஜேந்தர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது