பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுக்ளது . சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கான ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருக்கைகள் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கூட்டம் முடிந்ததற்கு பிறகாக நடைபெற இருக்கக்கூடிய அலுவல் ஆய்வுக் கூட்டத்திலும் யார் பங்கேற்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கான இருக்கை மாற்றம் செய்யப்படாததால், ஓபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதேபோல் சட்டப்பேரவைக்கு பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்திலும் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஐய்யப்பன் ஆகிய 3 சட்ட உறுப்பினர்களும் பேரவைக்கு வந்தனர். நேராக சட்டப்பேரவைக்கு உள்ளே சென்ற அவர்கள், உறுப்பினர்கள் கையொப்பமிடும் இடத்திற்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டு, பின்னர் மரியாதை நிமித்தமாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துவிட்டு, அவர்கள் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர்.
அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்ததற்கு சபாநாயகர் எந்த முடிவுகளையும் எடுக்காததால், அதை கண்டிக்கும் விதமாக சட்டப்பேரவையை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆகையால் ஓ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். .