விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி., ஏழுமலைக்கு வாழ்த்து தெரிவித்து, விழுப்புரம் சிக்னல் சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு உள்ளிட்ட பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதில், விழுப்புரம் காந்தி சிலை அருகே வைத்திருந்த பேனரை மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். அந்த பேனரில் இருந்த ஓ.பி.எஸ்., உள்ளிட்டோரின் படங்களை கிழித்து சென்றுள்ளனர்.
இதனை அறிந்து வந்த விழுப்புரம் மருத்துவர் அணியைச் சேர்ந்த கலைச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், டிஜிட்டல் பேனர் கிழிக்கப்பட்ட தொடர்பாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர். விழுப்புரம் நகர போலீசார் அந்த பேனரை உடனடியாக அங்கிருந்து அகற்ரியதுடன் பேனர் கிழிப்பு சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. விழுப்புரத்தில் அதிமுகவினரிடையே கோஷ்டி பூசல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.