T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் விறுவிறுப்பாக மாற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐடியாவை கொண்டுவந்தார்கள். கடந்தாண்டு நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.
இதில் நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது. இதையடுத்து தற்போது அடுத்தாண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இம்முறை தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையே நடந்த 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் புள்ளி பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பெற்ற வெற்றிக்கு பின் 75 சதவிகித வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை வலுவாக தக்கவைத்த தென்னாப்பிரிக்க அணி, 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால் வெற்றி சதவிகிதம் 75லிருந்து 66.67 சதவிகிதமாக குறைந்தது.
இதையடுத்து புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின் தங்கியது தென்னாப்பிரிக்க அணி. இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டிலும் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி விகிதம் 66.67 சதவிகிதத்திலிருந்து 60 ஆக குறைந்துவிட்டது. தென்னாப்பிரிக்க அணி 2ம் இடத்தில் தான் உள்ளது.
இலங்கை அணி 53.33 சதவிகிதத்துடன் 3ம் இடத்திலும், இந்திய அணி 52.08 சதவிகிதத்துடன் 4ம் இடத்திலும் உள்ள நிலையில், இலங்கை, இந்தியா அணிகள் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று, தென்னாப்பிரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழக்கும். எனவே இம்முறை இந்தியாவிற்கும் ,தென்ஆப்ரிக்காவிற்கும் இடையே இரண்டாவது இடத்திற்கு கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது