தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கிற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்பு அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் திருவாரூர் நகரத்திற்குட்பட்ட துர்காலயா சாலையில் அமைந்துள்ள மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பாகற்காய் பாடலை ஓடியாடி கும்மி யடித்து சக ஆசிரியர்களுக்கு முன்பு சிறு குழந்தை பாடுவது போல் பாவனை செய்து பாடிய வீடியோதற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தலைமை ஆசிரியை சுமதி இந்த பாடலை பாடியது சக ஆசிரியர்களுக்கு புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்து ஆசிரியர் சுமதியிடம் கேட்டபோது நான் எனது பள்ளியிலேயே இப்படித்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும் பாடல் மூலம் அவர்கள் மனதில் பாடங்களை பதிய வைக்கும் வகையிலும் பாடம் நடத்தி வருகிறேன் என்று கூறினார். மேலும் அந்த பயற்சி வகுப்பில் சக ஆசிரியர்களுக்கு முன்பு இந்த பாடலை பாடியது இன்னும் புத்துணர்சியை அளிக்கும் விதமாக அந்த பயிற்சி வகுப்பை மாற்றியது என்று கூறினார்.