பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெறுகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மதியம் 3.30 மணிக்குபாரம்பரிய இறுதிச் சடங்கு ஆராதனை நடைபெறுகிறது.

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் தனது 96 வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.. திட்டத்தட்ட 70 ஆண்டு காலம் நீண்ட நெடு ஆட்சி புரிந்த மகாராணி எலிசபெத் உடல் குதிரை படை வீரர்கள் புடை சூழ முழு அரசு மரியாதையுடன் கடந்த புதன்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. அவரது சவப்பெட்டி துப்பாக்கிப் பொருந்திய வண்டியில் நாடாளுமன்ற மாளிகைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் சவப்பெட்டியின் அருகே நடந்து சென்றனர்.

ராணியின் இறுதி சடங்கிற்காக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு உலக தலைவர்கள் பலர் வந்துள்ளனர். அவர்களை மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்றார். அத்துடன் லட்சக்கணக்கான பொதுமக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று ராணி எலிசபெத்தின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கடந்த 11 நாட்களாக பிரிட்டன் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குகள் இன்று நடைபெறுகிறது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் ராணியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்வில் உலக நாடுகளை சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள், மன்னர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.