முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே போல் தங்களையும் விடுதலை செய்யக் கோரி இந்த வழக்கில் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டியதில்லை என்றும் ஏற்கனவே இதே வழக்கில் தொடர்புடையவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும் நீதிமன்றத்தை நாடியுள்ள மனுதாரர்கள் அனைவரும, கிட்டதட்ட 30 ஆண்டுகள் சிறையில் உள்ளதையும், அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தியதை கணக்கில் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அதை தான் உச்சநீதிமன்றம் பேரறிவளான் விவகாரத்தில் கருத்தில் கொண்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து பேரறிவாளன் போலவே விடுதலை பெற இவர்கள் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அனைவரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விரைவில் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.