இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரத்தில் பெரிய விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
ராமேஸ்வரத்தில் சுமார் 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு விசைப்படகு மற்றும் அதிலிருந்த 15 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் மீனவர்கள் திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தினர் .
இதன் தொடர்ச்சியாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ராமேஸ்வரத்தில் பெரிய விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 100 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிடிபட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நாளை மத்திய மாநில அரசுகளை கவனத்தை ஈர்த்தும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்..