உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை பட்டாகத்தியால் வெட்டிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தொப்பையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவராஜ் . இவர் கடந்த 30-ந்தேதி தனது முந்திரி தோப்பில் வேலை பார்த்து கொண்டிருந்த போது சேந்தநாடு கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து வந்த சில இளைஞர்கள் வந்துள்ளனர்.
இதில், சென்னையை சேர்ந்த 2 பேர் அவர்களது பெண் தோழிகளுடன், சிவராஜியின் முந்திரி தோப்புக்கு சென்று உள்ளனர். இதை பார்த்த, சிவராஜ் அவர்களை திட்டி அனுப்பியதால் இளைஞர்கள் சிவராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் 17 வயது சிறுவன், அவனது சென்னை நண்பர்கள் சிலருடன் சிவராஜ் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் வெட்டி உள்ளனர்.
அங்கிருந்து தப்பி செல்லும் வழியில் சாலையோரம் நடந்து வந்த களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (27) என்பவரையும் சரமாரியாக வெட்டினர். இவர்கள் இருவருககும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு பெட்ரோல் பங்கில் ஆட்டோவுக்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு பணம் கொடுக்காமல் பட்டாகத்தியை காட்டி மிரட்டியதுடன், தொப்பையன் குளத்தில் டாஸ்மாக் முன்பு இருந்த இரண்டு முதியவர்களையும் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதனிடையே பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகள் கொண்டு இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார் மயிலாப்பூரை சேர்ந்த ஹரிஹரசுதன் பாடி பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணா, ஜெகதீஸ்வரன் , தைரியனாதன் மற்றும் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் 2 பட்டா கத்திகள், 1 அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.