கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன்புதூர் பகுதியில் உடம்பில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் கூலி தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டம் மேல கிருஷ்ணன் புதூர் புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை (50). கூலித் தொழிலாளியான இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும்,இரு மகன்களும் உள்ளனர், ராஜதுரை மீது ஈத்தாமொழி, சுசீந்திரம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி,திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு மேல கிருஷ்ணன் பதூர் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது .
இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் ராஜதுரை பிணமாக கிடப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் அப்பகுதியினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சம்பவ இடம் வந்த சுசீந்திரம் போலீசார், ராஜதுரையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரை மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் அவரது உயிரிழப்பு கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்