கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா, போதை மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் உள்ளிட்டை கடத்தி விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக, மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ள நிலையில், நேற்று கோவை பேரூர் சிறுவாணி சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை, சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த மூட்டையில் விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் 3 பண்டல்களில் இருந்த 8.5 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை கடத்தியது தொடர்பாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நுதன் மிதல்சிவா(33), சுதர்ஸ்லிமா(58) மற்றும் சென்னனுர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(38) ஆகியே 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
