கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33) ரம்யா (29) தம்பதியினர். இவர்களுக்கு இளவிழியன் (10) என்ற மகன் உள்ளார். மணிகண்டன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை 9 மணி அளவில் ரம்யா மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார். கரூர் – ஈரோடு நெடுஞ்சாலையான கரூர் பாலிடெக்னிக் அருகில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகத்தில் வந்த தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, இருசக்கர வாகனத்தின் மேல் மோதியது . இந்த கோர விபத்தில் தலையில் படுகாயம் அடைந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவனான இளவிழியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் படுகாயம் அடைந்த ரம்யா கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் காவல் நிலைய போலீசார் இளவிழியனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய தனியார் ஜவுளி நிறுவன பேருந்து ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.