பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர் கிராமத்தில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மயானத்தின் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையில் நேற்று இரவு 09.40 மணியளவில் வழக்கம் போல் விற்பனையாளரான துறை மங்கலத்தை சேர்ந்த சின்னசாமி மகன் ராம்குமாரும், உதவியாளரான களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெகன் என்பவரும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, மாஸ் அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ராம்குமாரையும், ஜெகனையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி கல்லா பெட்டியில் இருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், லாக்கரில் இருந்த 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் என மொத்தம் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டதோடு, அவர்களுக்கு பிடித்தமான விலை உயர்ந்த மதுபான பாட்டில்களையும் எடுத்து கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பி சென்று தலைமறைவாகினர்.
இந்த திடீர் சம்பவத்தால் நிலைகுலைந்த சேல்ஸ்மேன் ராம்குமாரும், உதவியாளர் ஜெகனும் பதட்டத்தில் இருந்து மீண்டு பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் எஸ்ஐ.,பாஸ்கர் தலைமையிலான பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டு கத்தி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் மதுபான விற்பனை கடையில் கத்தி முனையில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் பாடாலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.