நாகையில் தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தியதை ஆசிரியர் கண்டித்து பெற்றோரிடம் கூறியதால் எட்டாம் வகுப்பு மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகப்பட்டினம் தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஸ்ரீநிதி நாகையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. அதனால்ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார்.
மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாணவியின் தேர்வுத் தாளை வாங்கி பார்த்த ஆசிரியர் மதிப்பெண் திருத்தி இருப்பதை பார்த்து கண்டித்ததுடன் மாணவியின் தந்தைக்கு அலைபேசி வாயிலாக கூறி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி பள்ளி முடிந்து வந்தபோது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குதித்து உள்ளார்.
இந்த நிலையில் தண்ணீரில் மூழ்கிய மாணவியை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.