ரஷ்யா உடனான போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்கா அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
நேட்டோவில் உறுப்பினராக உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து உள்ளது. இந்த போரானது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து இன்று வரை நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் நிறைய உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தாழ்ந்தது அல்ல என்று தீவிர போரில் ஈடுபட்டு வருகின்றன .
.இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது. போரால், உக்ரைனில் உள்ள பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் சூழல் நேர்ந்துள்ளது .
இந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு வர உக்ரைனுக்கு ரூ.4335.53 கோடி ராணுவ நிதியுதவி வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் அறிவித்து உள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பிற்காக 2021ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் 17வது நிதியுதவிக்கு அதிபர் பைடன் ஒப்புதலுடன், இதனை அங்கீகரிக்கிறேன் என பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.
அந்தவகையில் அதிக செயல்திறன் கொண்ட ராக்கெட் சாதனங்கள் மற்றும் பீரங்கி சாதனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்களை, உக்ரைன் போரில் பயன்படுத்தி கொள்ள வழங்குகிறோம் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார் .
அதிபர் பைடன் பொறுப்பேற்றது முதல், இதுவரை மொத்தம் உக்ரைனுக்கு ரூ.68 ஆயிரத்து 580 கோடி மதிப்பில் ராணுவ உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.