தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பல கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த என்ஜாய் என்ஜாமி பாடலும் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலை பாடகர் தீ பாடினார்.
ஆனால் அந்த பாடலை எழுதி பாடி இவ்வளவு பெரிய ஹிட் ஆகக் காரணமாக இருந்த தெருக்குரல் அறிவு இந்த மாபெரும் நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தெருக்குரல் அறிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாகவும் , அதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருக்கிறது என்றும் பலர் பலவிதமாக கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு தனது மனநிலையை ஒரு பதிவின் மூலம் உருக்கமாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியதாவது :
“என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நான் தான் இசையமைத்தேன்,எழுதினேன், பாடினேன் நடித்தேன். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தை கூட கொடுக்கவில்லை.
இப்போது அந்தப் பாடல் அடைந்திருக்கும் வெற்றிக்காக நான் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும், பகலையும் கழித்திருக்கிறேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமைகளான என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்தத் தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்.என்ஜாய் எஞ்சாமி போல.
இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள்.
அவை அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசுகின்றனர். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை. பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் முடியாது. ஜெய்பீம். முடிவில் உண்மை எப்போதும் வெல்லும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.