குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அமைந்துள்ளது. பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 26ஆம் தேதி தொங்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்த நிலையில், பாலம் திடீரென்று அறுந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தார்கள். இதுவரை குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 140 ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , ‘’குஜராத் மோர்பி தொங்கு பாலம் அருந்து விழுந்த விபத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்று கூறியிருக்கிறார்.
மேலும், ’’காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். அதே நேரம் விபத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் விரைந்து பத்திரமாக மீட்கப்பட வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்.