கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த லிங்கரெட்டிப்பாளையம் சீனிவாசன் (வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்) என்பவரது வீட்டில் கடந்த வாரம் அவரது மனைவி கௌரி மற்றும் மகன் பாலகிருஷ்ணன் என்பவருடன் கன்னியாகுமரி பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லேப்டாப், கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து கௌரி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் தனிப்படை அமைத்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பண்ருட்டி சாலையில் இரவில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நெல்லிக்குப்பம் எய்தனுரை சேர்ந்த செந்தில்முருகன் (24), பி.என்.பாளையம் செல்வமணி(23), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இளையபெருமாள் ஆகிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப், கேமரா, இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.