தமிழகத்தில் கடந்த ஜுலை 24ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத் தேர்வு உரிய கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இதில் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி தற்போது அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் முறைப்படி மேல்முறையீடு செய்யலாம்.
ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி முறையாக மேல் முறையீடு செய்ய வேண்டும். பின்னர் இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும்.
சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தனது பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக அளிக்க வேண்டும்.
இந்த உத்தேச விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இந்த அனைத்து கோரிக்கைகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெளிவாக குறிப்பிட்டுள்ளது .