இன்று மாலை சனிபிரதோஷ நேரத்தில், சகல செல்வங்களையும் வாழ்க்கையில் பெற இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள் . மூன்று பிரதோஷங்களுக்குள் உங்கள் வாழ்வில் நிச்சயம் ஏற்றம் வரும். பிரதோஷ காலத்தை ஏன் முக்கியமானது என்கிறோம் தெரியுமா ?
தாருகாவனத்து ரிஷிகள் கர்வத்தால் தலைகால் புரியாமல் ஆடிய போது சிவபெருமான் பிட்சாடனராக வந்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டினார் . கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர் என்கிறது புராண கதை . அதனால் தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் தனி சிறப்பு வாய்ந்தது.

சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது முன்னோர் காலத்து ஐதிகம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும்.
சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களையும்,வில்வம், பூக்களை வழங்கலாம்.
அதிலும் குறிப்பாக இன்று மாலை 4.30 லிருந்து 6 மணி வரை சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள ஏழு தலைமுறைக்கான பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம்.
மற்ற பிரதோஷ நாட்களில் சிவ தரிசனம் செய்வதைக் காட்டிலும் சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்களைப் பெறலாம் என்பது ஆச்சார்யப் பெருமக்களின் வாக்கு.