திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா . இந்த தம்பதியினருக்கு நித்திஷ் மற்றும் ரித்தீஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர் முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் கருதி கடந்த 2 ஆம் தேதி குவைத் நாட்டுக்கு வேலைபார்க்க சென்றுள்ளார் .
வேலைக்கு சேர்ந்ததும் வேலை மிகவும் கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார்
இந்த நிலையில் குவைத் நாட்டிற்கு சென்று நான்கு நாட்களிலேயே முத்துக்குமரன் உயிரிழந்தார் என்ற தகவலை முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு ஏஜென்ட் மூலம் தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இறப்பதற்கு முன் மனைவியிடம் பேசிய முத்துக்குமரன் பாலைவனத்தில் ஆடு மாடுகளை மேய்க்க சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் தண்ணீர், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் தன்னை இந்தியாவுக்கே அனுப்பிவிடுங்கள் என ஏஜென்டிடம் கூறியதாக முத்துக்குமரன் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தனது ஊரை சேர்ந்த நண்பரிடமும் போனில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய போதே முத்துக்குமரனின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே முத்துக்குமரன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும் என சுமார் 250 க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து முத்துகுமரன் மனைவி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் உயிரிழந்துள்ள எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார்.