புதுச்சேரியில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அரசு பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிந்து வைத்து விட்டு அரசு வேலைக்காக காத்து உள்ளனர். இந்நிலையில் அரசு உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன விதிக்குட்பட்டு 20 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசு முயற்சித்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் இந்த எதிர்ப்பு காரணமாக அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கும் இளைஞர்கள் அந்த வாய்ப்பை இழந்து வயது மூப்படைந்து அரசு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதால், புதுச்சேரி அரசு அறிவித்தப்படி காலிப்பணியிடங்களுக்கு நேரடியாக தேர்வு செய்யும் முறையை கைவிடக்கூடாது என்றும் இதற்கான முட்டுக்கட்டையை களைய வேண்டும் என வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் மத்திய உள்துறை அமைச்சர், துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு மத்திய தபால் நிலையம் முன்பு தபால் அனுப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.