பல்வேறு ரயில் சங்கங்களுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ரயில்வே சேவைகள் குறித்தும் ரயில் நிலையங்களின் மேம்பாடு குறித்தும் நாகர்கோவிலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பல்வேறு ரயில் சங்க பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரயில்களைக் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருதல் சில ரயில்கள் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏதுவாக வழிவகை செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாகத் தாம்பரம் – நாகர்கோவில் ரயிலை தினசரி ரயிலாக இயக்குதல், ஷார்மினார் விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீடித்தல், வார கடைசியில் வேளாங்கண்ணி செல்ல கன்னியாகுமரி வழித்தடத்தில் ரயில் இயக்குதல், மதுரை – திருவனந்தபுரம் இடையே மெமோ ரயில் இயக்குதல், டவுன் ரயில் நிலையத்தில் பரசுராம் ரயில் 1 நிமிடம் நின்று செல்ல வழிவகை செய்தல், ரயில் நிலையம் அருகே பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதனைக் கேட்டறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்த கோரிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கைகள் வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவதாகவும் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சூசைராஜ், மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவக்குமார், ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த ஸ்ரீ ராம், கன்னியாகுமரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் முருகதாஸ், ராதாபுரம் நாங்குநேரி தாலுகா ரயில் பயணிகள் சங்க தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.