மதுரையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்லத் திருமண விழாவிற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். பின் திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், AM, PM பார்க்காத CM என்ற போஸ்டர் என்னை மிகவும் ஈர்த்தது. அதாவது காலை AM , மாலைPM பார்க்காத சி.எம். அதைவிட நான் MM CM ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதாவது மினிட் டூ மினிட் சி.எம்.ஆக இருந்து, ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் நமது தமிழ்நாட்டை No .1 ஆக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறோம்.

மக்கள் அனைவரும் நமக்கு எதை நம்பி வாக்களித்தனரோ , தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோமோ, நேரடியாக சென்று அதையெல்லாம் அவர்களிடம் கூறினோம். அதை ஏற்றுக் கொண்ட மக்கள் நமக்கு வாக்களித்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற போது நான் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவேன் என்று கூறியிருந்தோம். நம் மீது மக்களுக்கு பல மடங்கு நம்பிக்கை உள்ளது. அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இனி எந்த தேர்தல்களாக இருந்தாலும் வெற்றி பெறப் போகிறோம் என்று உறுதியான நம்பிக்கை நம்மை விட நம் மக்களுக்கு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களை அதற்கு சாட்சி.

இப்போது எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பதவியே தற்காலிக பதவி தான். அதிமுக எம்எல்ஏக்களே எடப்பாடி பழனிசாமியுடன் பேசுவதில்லை . திமுக எம்எல்ஏக்கள் பேசப் போகிறார்களா ? தற்காலிக பதவியில் உள்ள எடப்பாடி பழனிசாமி இன்னொரு கட்சியை விமர்சிக்கிறார். அதிமுக தற்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக பிளவுப்பட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. தற்காலிக பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை பேச தகுதி இருக்கிறதா? நானும் உயிரோடு இருக்கிறேன். இந்த நாட்டில் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காகத்தான் , இந்த காமெடி கதைகளில் எல்லாம் அவர் கூறி வருகிறார். என்னை பொறுத்தவரை திட்டமிட்டு பரப்பக்கூடிய இந்த பொய் பிரச்சாரத்தை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக நான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.